தற்கொலைக்கு முன் போனில் பேசினாளே... இப்போது புலம்பும் பிரியதர்ஷினி காதலன்!
சேலம்: நான் செத்துட்டா என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா... என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் சேலம் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி.
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கடைசியாக ஜூலை 4ம் தேதி தன்னிடம் பேசிவிட்டு பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை கொண்டதாக காதலன் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கீரிப்பட்டியை சேர்ந்த கூட்டுறவு சங்க செயலாளர் ஆனந்தன் மகள் பிரியதர்ஷினி, 23. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.ஏ., படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 4ம் தேதி, ஈஸ்வரமூர்த்திபாளையம் அருகே, கல்லூரி பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் தந்தை ஆனந்தன் கொடுத்த புகாரில், மங்களபுரம் போலீசார் விபத்து வழக்குபதிவு செய்தனர். ஆனால், காதல் தோல்வியால் தான், பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டது உறுதிசெய்யப்பட்டது. போலீசார் தரப்பில், காதலன் அரவிந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிய தயக்கம் காட்டியதாக புகார் எழுந்தது.
இதற்கிடையே, பிரியதர்ஷினியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், காதல்தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, ஊடகங்களில் செய்தி வெளியானது.
நான் செத்துட்டா என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா, அந்த அளவுக்கு நான் உன் மேல வச்சப் பாசம், என் லவ்வை நீ புரிஞ்சிக்கும்போது அத நான் பார்த்து சந்தோஷப்பட முடியாது. ஏனா நீ இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்.
இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான். நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு உன் வாழ்க்கையில் கிடைக்கும். நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வரமாட்டேன்டா என்று உருக்கமாக எழுதியிருந்தார் பிரியதர்ஷினி.
பிரியதர்ஷினியின் கடிதம் குறித்தும், அவரது காதலன் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதன் பேரில், நேற்று விபத்து வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து, பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி, காதலனான தம்மம்பட்டி அடுத்த, வண்ணாரை தெருவை சேர்ந்த பட்டதாரி அரவிந்த்தை, 22, மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் ஒதுங்கினேன். நான் ஒதுங்குவதை அறிந்த பிரியதர்ஷினி தனது வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் என்னை அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
கடந்த 4ம் தேதியும் கல்லூரிக்கு பேருந்தில் சென்ற போது அவர் போனில் என்னிடம் பேசினார். பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இதற்காக அவர் தற்கொலை செய்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
பிரிதர்ஷினி தற்கொலை தொடர்பாக மங்களபுரம் போலீசார் ஏற்கனவே விபத்து வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது மாணவி பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை மாற்றிய போலீசார் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அரவிந்த மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வர மாட்டேன்டா... காதலுக்குப் 'பலியான' பெண்ணின் கதறல்!