உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய வழக்கு – சேலம் நீதிமன்றத்தில் காவல் ஆணையர் ஆஜர்
சேலம்: சேலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதான வழக்கில் மாநகர காவல் ஆணையரிடம் சேலம் ஊழல் தடுப்பு நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
சேலம் அங்கம்மள் காலனி, அண்ணாதெருவை சேர்ந்த முனியப்பன் மகன் ராஜேந்திரன். இவர், 2013 ஆம் ஆண்டு கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது, கல்லூரிக்கு செல்லும் பெண்ணை கிண்டல் செய்த சம்பவத்தில், தலைதூக்கிய மோதல் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களை சொந்த ஜாமீனில் விட ராஜேந்திரன் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார்.
இதை ரகசியமாக கண்காணித்த சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், எஸ்.ஐ, ராஜேந்திரன் பணம் வாங்கும் போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து ராஜேந்திரன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு, சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், நீதிபதி மோகன் முன்னிலையில் நேரில் ஆஜராகி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் லஞ்சம் வாங்கியது குறித்து விரிவான தகவல்களை அளித்தார்.