ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தவறான தகவல் .. புகார் கொடுத்தவர் மீது கேஸ்!
சேலம்: சேலத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்திற்குத் தவறாக தகவல் அளித்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டசபைத் தொகுதி தேர்தல் பிரிவுக்கு பாப்பம்பாடி, சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓமலூர் வட்டம், நத்தியாம்பட்டி கிராமத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலையடுத்து பறக்கும்படை தலைவர் மயில்சாமி தலைமையில் அப்பகுதிக்கு சென்று காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் தகவல் உண்மையில்லை என்பது தெரியவந்தது.
தவறான தகவலளித்து பறக்கும்படையினரை அலைக்கழித்ததாகக் கூறி பறக்கும்படையின் தலைவரும், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலருமான மயில்சாமி, தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.