தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து என்ஜினியரிங் மாணவர் பலி - கோழி பிடித்த போது பரிதாபம்!
சேலம்: சேலம் அருகே கோழியை துரத்திச் சென்ற என்ஜினியரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகேயுள்ள நடுவலூர் ஊராட்சி, பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜபாண்டியன் (26). இவர் சேலத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக கடந்தவாரம் வீட்டிற்கு வந்திருந்தார் ராஜபாண்டியன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேற்று கறி சமைப்பதற்காக தனது வீட்டில் வளர்க்கப் பட்டு வரும் கோழியை அவர் பிடிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், ராஜபாண்டியனின் கைக்கு சிக்காமல் போக்கு காட்டியுள்ளது கோழி. அப்போது எதிர்பாராத விதமாக தனது வீட்டின் அருகிலிருந்த தண்ணீரில்லாத 126 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார் ராஜபாண்டியன். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர், ராஜபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications