சேலத்தில் பெண் ஏட்டு தற்கொலை முயற்சி – உயர் அதிகாரி திட்டினாரா?
சேலம்: சேலம் சிறையில் பெண் ஏட்டு ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி அருகில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஏட்டாக பணியாற்றி வருபவர் சங்கீதா. கோவையை சேர்ந்த இவர் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்து இருந்தார். பின்னர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறை அதிகாரிகள் சங்கீதாவை தூக்கி சென்று சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் அவர் உயிர் தப்பினார்.
சங்கீதா பணிக்கு வந்தபோது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவரை பார்த்து சங்கீதா தொப்பி அணிந்து சல்யூட் அடிக்கவில்லையாம். இதனால் அந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏட்டு சங்கீதாவிடம், இதுபற்றி சிறை துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
இதனால் பயந்த சங்கீதா தன்னை உயர் அதிகாரிகள் விசாரித்து சஸ்பெண்ட் மற்றும் வேறு எந்த நடவடிக்கைகள் எடுத்து விட்டால் என்ன செய்வது என பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சேலம் மத்திய சிறை சூப்பிரெண்ட் சண்முக சுந்தரம் விசாரித்து வருகிறார்.
இந்த தற்கொலை முயற்சி சம்பவம் சேலம் பெண்கள் கிளை சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications