காதலியைக் கொன்று காதலனும் தூக்குப் போட்டுத் தற்கொலை!
சேலம்: சேலத்தில் இளம்பெண் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அந்த இளைஞரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சார்வாய் புதூர் பஞ்சாயத்து 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கின்ற ஆறுமுகம். விவசாய கூலித் தொழிலாளியான அவருடைய மனைவி தெய்வானை. இவர்களுக்கு லதா, சதீஸ்குமார் என இரு குழந்தைகள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆறுமுகம் இறந்து விட்டதால் தெய்வானை தனது மகள் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இளம் பெண் லதா கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் லதாவுக்கு பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தது. இதனால் மூன்று மாதங்களுக்கு முன் சார்வாய் புதூருக்கு வந்த லதா அதே பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சார்வாய் கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் என்பவருடன் லதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் லதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த வாலிபர் அஜீத்குமார் புதன்கிழமை இரவு 7 மணியளவில் லதாவின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த லதாவிடம் நாம் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது. அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அஜீத்குமார் வீட்டினுள் இருந்த செங்கலை எடுத்து லதாவின் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த லதாவின் கழுத்தில் வீட்டிலிருந்த சேலையால் இறுக்கி தூக்கில் தொங்க விட்டார்.
அதன்பின்னர் லதாவின் அருகில் அஜீத்குமாரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்த லதாவின் தாய் தெய்வானை உள்ளே பூட்டியிருந்ததால் மகளை கூப்பிட்டு பார்த்து விட்டு ஜன்னலை திறந்தபோது மகளும், மற்றொரு வாலிபரும் தூக்கு மாட்டிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தலைவாசல் போலீஸார் இறந்து கிடந்த லதா அஜீத்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.