மது உள்ளே போனால் என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார்கள் இந்த குடிகாரர்கள்!
Recommended Video
சேலம்: சேலம் அருகே குடி போதையில் வீட்டுக்கு வந்த நபர் தனது மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். அவர் மறுக்கவே கோபமடைந்து மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டார். ஆனால் மனைவி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸில் நாடகமாடினார். கடைசியில் குட்டு வெளிப்படவே தற்போது அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ரிக் வண்டி ஓட்டுனர் கார்த்திக். இவரது மனைவி பூமதி மற்றும் குழந்தைகள் நிலா, பூவரசன். இந்த நிலையில் பூமதி மற்றும் இரண்டு குழந்தைகளையும் 19.9.208 அன்று கார்த்திக் பலத்த தீக்காயங்களோடு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக தன் மனைவி பூமதி குழந்தைகளோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கவலைக்கிடமாக இருந்த பூமதி மற்றும் அவரது குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், பூமதி மற்றும் ஐந்து வயது குழந்தை நிலா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர். மரணத்திற்கு முன்பு பூமதி தனது சகோதரனிடம் தன்னை கொளுத்தியது கணவர்தான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
பூமதி மற்றும் குழந்தைகளை மது போதையில் கணவர் கார்த்திக்கே தீ வைத்து கொல்ல முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சேலம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதியை அவரது சகோதரன் சந்தித்த போது அவர் கூறிய விஷயங்களை செல்போனில் பதிவு செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இதில், நாள்தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கார்த்திக் தன்னோடு தகராறில் ஈடுபட்டதாகவும், சம்பவம் நடந்த தினத்தன்று அளவுக்கு அதிகமான போதையில் வந்த கார்த்திக் தன்னை உறவுக்கு அழைத்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட தகராறில் தன் மீதும் குழந்தைகள் மீதும் எண்ணெய் ஊற்றி தீவைத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை வாக்குமூலமாக பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குடி குடியை கெடுக்கும் என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.