மாமூல் பிரிப்பதில் பஞ்சாயத்து... இன்ஸ்பெக்டருடன் சண்டையிட்ட ஏட்டு டிரான்ஸ்பர்!
சேலம்: இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்ததற்காக சேலத்தில் ஏட்டு ஒருவர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஸ்வநாதன். இதே போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளவர் தேவேந்திரன்.
கடந்த 8-ந் தேதி இரவு, காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனும், ஏட்டு தேவேந்திரனுமிடையே திடீர் மோதல் உண்டானது. அன்றைய தினம் வசூலான மாமூல் பணத்தை பங்கிடுவதில் இருவருக்கும் இடையே வாக்குவாதமும், அதனைத் தொடர்ந்து மோதலும் உண்டானதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த தேவேந்திரன், இன்ஸ்பெக்டரிடம் தனக்கு முறையான பங்கு வருவதில்லை என கண்டபடி திட்டியுள்ளார். இதனை அருகில் இருந்து சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு போலீஸ்காரர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலமாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், ஏட்டு தேவேந்திரன் ஆகிய 2 பேரையும் அழைத்து நேரடி விசாரணை நடத்தியுள்ளார் சக்திவேல். பின்னர், ஏட்டு தேவேந்திரன் மாவட்ட ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.