"அம்மா"வை பார்க்க வந்து மகளை தொலைச்சுட்டேனே.... ஜெ.வுக்கு சேலம் பெண் கதறல் மனு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்க வந்த இடத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை தொலைத்து விட்டு தேடி வருகிறார் ஒரு முதிய தாய். மகளை கண்டுபிடித்து தர முதல்வர் செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
மகளை தொலைத்துவிட்டு தேடும் பெண்ணின் பெயர் சரஸ்வதி. கணவர் ராமசாமி 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
சரஸ்வதி - ராமசாமி தம்பதிக்கு பூவாயி, இந்திராகாந்தி, காந்திமதி என்ற 3 பெண்களும், கம்பர் என்ற ஒரு பையனும் இருக்கிறான். இவர்கள் குடும்பத்தோடு வாழப்பாடி அருகில் உள்ள ஏத்தாப்பூரில் குடியிருந்தனர்.

2 பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட சரஸ்வதி, தனது சொந்த வீட்டில் காந்திமதி, கம்பருடன் வசித்து வந்தார்.
இவர்கள் இருவரும் சற்று மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏத்தாப்பூரில் யாருடைய ஆதரவும் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் சரஸ்வதியை ஏமாற்றி நிலத்தையும், வீட்டையும் பிடுங்கிக் கொண்டு துரத்தி விட்டார்களாம். உறவினர்கள் யாரும் உதவாத நிலையில், முதல்வரிடம் உதவி கேட்க சென்னை வந்துள்ளனர். வந்த இடத்தில் மகளை தொலைத்து விட்டு தவித்து வருகிறார் சரஸ்வதி.
கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார் சரஸ்வதி. டி.வி.,யில் எல்லா மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அம்மா உதவி செய்வதைப் பார்த்தோம். எங்களுக்கும் உதவி செய்வாங்க என்று நம்பி,நானும் என் பையன் கம்பர், என் மகள் காந்திமதியும் ரயில் ஏறி மெட்ராஸ்க்கு போனோம். இருட்டி விட்டதால் ரயில்வே ஸ்டேஷனிலேயே 3 பேரும் படுத்து உறங்கினோம்.
விடிந்ததும் எழுந்து பார்த்த போது என் மகள் காந்திமதியைக் காணவில்லை. கதறி அழுது கொண்டு ஒவ்வொரு இடமாகத் தேடினோம். காணவில்லை. பிறகு தலைமை செயலகத்திற்குச் சென்று விஷயத்தைச் சொல்லி அழுதோம். அங்கே எங்கள் புகாரை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டாங்க.
என் மகள் காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது. எங்க போனதோ, யார் பிடிச்சுட்டுப் போயிட்டாங்களோ என்று தெரியலையே. கடவுள் மாதிரி இருக்கிற முதல்வர் அம்மாதான் என் மகளை கண்டுபிடித்துத் தர வேண்டும்.
நாங்க நிரந்தரமாக எங்க வீட்டில் குடியிருக்க அம்மா உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் சரஸ்வதி. முதிய பெண்மணியின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா முதல்வர் ஜெயலலிதா.











Click it and Unblock the Notifications