தங்கத் தாரகைக்கும் தங்கத் தலைவருக்கும் ஒரே மாதிரி சந்தனப்பேழை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று மாலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகம் கருணாநிதி 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுத கூறிய அவரது கடைசி ஆசையாகும்.

கருணாநிதிக்கும் சந்தனப்பேழை
கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தன பேழை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையை போன்றே தயார் செய்யப்பட்டது.

எம்ஜிஆர் சமாதி பின்புறம்
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினா கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழிலும், ஆங்கிலத்திலும்
6 அடி நீளம், 2½ அடி அகலம் கொண்ட அந்த பெட்டியின் மேல் பகுதியில் "புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா" என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், "கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3-6-1924 - 7-8-2018" என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

ஒரே மாதிரி சந்தனப் பேழை
ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரேமாதிரி சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த 2 சந்தனப் பேழைகளையும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஹோமேஜ்' நிறுவனமே வடிவமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications