500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: 70,000 மணல் லாரிகள் நிறுத்தம், ரூ.3 கோடி நஷ்டம்
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் 70,000 மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது
நாமக்கல்: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் மணல் குவாரியில் பணம் வாங்க மறுக்கின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் 70,000 மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரமதர் மோடி அறிவித்துள்ள திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில், மணல் குவாரிகளில், லோடு செய்யும் லாரி உரிமையாளர்கள் ரூ.1,000, ரூ.500 மட்டுமே வைத்திருக்கின்றனர்.
மத்திய அரசின் அறிவிப்பால் இந்த ரூபாய் நோட்டுகளை குவாரியில் வாங்க மறுக்கின்றனர். அதனால் இரண்டு நாட்களாக லோடு செய்யாமல் லாரிகள் காத்திருக்கின்றன. மேலும் தேசிய பர்மிட் பெற்று இந்தியா முழுவதும் செல்லும் லாரி ஓட்டுநர்கள் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைத்திருக்கின்றனர்.
அவர்கள் சில்லரை தட்டுப்பாட்டால் மாற்றுவதற்கு வழியின்றி சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஆங்காங்கே ஒரு இடம் தேர்வு செய்து உணவு மற்றும் அத்தியாவசிய தேவையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின், திடீர் அறிவிப்பால் லோடு ஏற்ற முடியாமல் தமிழகம் முழுவதும் 70,000 மணல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்க், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள, இரண்டு நாட்களுக்கு அனுமதி அளித்ததுபோல் மணல் லாரிகளுக்கும் இரண்டு நாட்கள் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.