அன்புச் சகோதரர் விஜயகாந்த் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்... சொல்வது சரத்குமார்!
சென்னை: நான் அதிமுக கூட்டணியில் இருந்தபோது விஜயகாந்த்தை விமர்சித்திருக்கலாம். ஆனால் என்றைக்குமே அவர் எனது அன்புச் சகோதரர்தான். அவர் பாஜக கூட்டணிக்கு வந்தால் நிச்சயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் கூட்டணியாக மாறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
விஜயகாந்த்துக்கு சரத்குமார் அழைப்பு விடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர்களாக இருந்தபோது இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.
விஜயகாந்த்தின் கேப்டன் பிரபாகரன் படம்தான் சரத்குமாருக்கு ஏற்றம் தந்த படம். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதை விட முக்கியமாக நடிகர் சங்கத்தில் இருவரும் இணைந்து கலக்கினார்கள்.
உண்மையில் விஜயகாந்த்துக்கு நல்ல தளபதியாக இருந்தவர் சரத்குமார்தான். விஜயகாந்த்தின் திட்டங்களை, கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருந்தார் சரத்குமார்.
தனக்குப் பின்னர் சரத்குமார் தலைவராக வேண்டும் என்பது விஜயகாந்த்தின் விருப்பம். அதேபோல சரத்குமார் தலைவரானார். இடையில் இருவரும் அரசியலிலும், தனிப்பட்ட முறையிலும் எதிரும் புதிருமாக போய்விட்டனர். இதில் காரசாரமான விமர்சனங்களும் உருவாகி விட்டன. இந்த நிலையில் தற்போது விஜயகாந்த், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும் என்று அழைத்துள்ளார் சரத்குமார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கும் விஜயகாந்த்துக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. எப்போதுமே அவர் எனது அன்புக்குரிய சகோதரர்தான். அதிமுக கூட்டணியில் இருந்தபோது அரசியல் ரீதியாக அவரை விமர்சித்துள்ளேன். அவ்வளவுதான்.
அவர் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். அதேபோல பாமகவும் வர வேண்டும். இவர்கள் இருவரும் வந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமை வாய்ந்த மாபெரும் கூட்டணியாக மாறும் என்றார் சரத்குமார்.