கண்டுகொள்ளாத ஜெயலலிதா.. கடுப்பில் கூட்டணி மாற தயாராகும் சரத்குமார்
தென்காசி: அதிமுக தலைமை கண்டுகொள்ளாத விரக்தியில் வேறு கூட்டணி தேட சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் கடந்த சட்டசபை தேர்தலை எதிர்கொண்ட சமத்துவ மக்கள் கட்சி அக்கட்சி கூட்டணியிலேயே தொடருகிறது.
ஜெயலலிதா அரசு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முதலில் பாராட்டு பத்திரம் சரத்குமாரிடமிருந்துதான் வந்து கொண்டிருந்தது. அப்படியிருந்தும், அவரை கண்டுகொள்ளவில்லை அதிமுக தலைமை.
ஆதரவு எதிர்பார்த்த சரத்
நடிகர் சங்க தேர்தலில் சரத் அணிக்கும், நாசர் அணிக்கும் கடும் போட்டி இருந்தபோது, அதிமுக சார்ந்த நடிகர்கள் ஆதரவு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் சரத்குமார்.
ஆதரவு இல்லை
நடிகர் சங்க தேர்தலில் அதிமுக யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என அறிவிப்பு வெளியானது. எனவே இஷ்டம்போல வாக்களிக்கலாம் என்றும் அக்கட்சி ஆதரவு நடிகர்களுக்கு அனுமதி கிடைத்தது.
சரத் அணி தோல்வி
கூட்டணியில் இருந்தபோதும், ஆளும் கட்சி ஆதரவு இல்லாதது சரத்குமாருக்கு பெரும் பின்னடைவாக போய்விட்டது. அதேபோல, நடிகர் சங்க தேர்தலிலும், சத் அணி தோல்வியை தழுவியது.
தனித்து நிற்க திட்டம்
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இப்போது அ.தி.மு.க கூட்டணியில்தான் உள்ளோம். ஆனால், தொண்டர்கள் விரும்பினால் தனித்து நிற்போம் என்று அக்கூட்டத்தில் உரையாற்றிய சரத்குமார் கூறியுள்ளார்.
இருவேறு கருத்துக்கள்
சரத்குமாருக்கு, அதிமுக தலைமீது ஏற்பட்டுள்ள கசப்பு இப்படி பேச வைத்துள்ளது என்றும், தொகுதி பங்கீட்டில் அதிக சீட் கேட்க ஆசைப்பட்டு இவ்வாறு ஒரு மிரட்டலை வெளியிட்டுள்ளார் என்றும் இருவேறு பார்வைகளை அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கிறார்கள்.
சலனம்
இதனிடையே சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளது சரத்குமாரை ஆட்டம் காணச் செய்துள்ளது.