பத்து நாளில் விஷால் அணி பற்றிய ரகசியத்தை உடைப்பேன்!- சரத்குமார் அதிரடி
எனக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை விஷால் அணி தொடர்ந்து செய்து வருகிறது. நானும் பதிலுக்குப் பேச ஆரம்பித்தால் அவர்களால் தாங்க முடியாது, என்று சரத்குமார் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் அக்டோபர் 18ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலும், விஷால் தலைமையிலும் இரு அணிகள் போட்டியிடயிருகின்றன. இந்தத் தேர்தலில் விஷால் அணியில் பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதுவரை சற்று அமைதியாக இருந்த சரத்குமார் அணி, இப்போது பிரச்சார களத்தில் குதித்துள்ளது. சரத் அணியை ஆதரிக்கும் நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், சிம்பு, ஷாம், தியாகு, ராம்கி, அசோக், ராதிகா, நிரோஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஒரே குடும்பமாக...
கூட்டம் முடிவில் சரத்குமார் பேசிய போது, "நடிகர்கள் ஒரே குடும்பமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் தேர்தல் வந்துவிட்டதால் தேர்தல் சார்ந்த வியூகம், நடிக-நடிகைகளை சந்தித்து நேரில் ஓட்டு சேகரிப்பது குறித்தான ஆலோசனையே இன்று நடத்தப்பட்டது.
நடிகர்கள் இடையே பிரச்னையோ பிரிவோ வரக்கூடாது என்றுதான் நான் அமைதி காத்தேன். ஆனாலும் என்னைப் பற்றி எதிரணியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர்.

நெஞ்சு வலிக்குதுங்க
அவதூறாக பேசுவதுமட்டுமில்லாமல் ஊழல் புகார் சொல்கின்றனர். இதையெல்லாம் கேட்கும் போது நெஞ்சு வலிக்கிறது.
கடந்த காலத்தில் நடிக - நடிகைகள் பிரச்னையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன். கஷ்டப்பட்டு உழைத்தேன். உறுப்பினர்களுக்காக உழைப்பது கடமை. நடிக சங்க கடனை விஜயகாந்துடன் இணைந்து அடைத்தோம். மீண்டும் கடன் வரக்கூடாது என்பதற்காக நிறைய ஆலோசனைகளை நடத்தினோம்.

மாதம் 26 லட்சம் வருமானம்...
அந்த ஆலோசனையில், மாதம் ரூ26 லட்சம் வாடகை வரக்கூடிய நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக நல்லதொரு ஒப்பந்தம் போடப்பட்டது. 29 ஆண்டுகள் 11 மாதம் என்று அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கிடைக்கும் வருமானத்தில் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்கு திட்டமிட்டோம். செயற்குழுவிலும் இதற்கான ஒப்புதல் பெற்றப்பட்டது.

கடைசி நேரத்தில்
அப்போது இந்த ஒப்புதல் வேண்டாம், நாங்களே நிதி திரட்டி கட்டிடம் கட்ட ஆவணம் செய்கிறோம் என்று சொல்லியிருந்தால், அந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றிருப்பேன். ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் கையெழுத்து வேட்டை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சி அளித்தது.

ரஜினிக்கு பாதுகாப்பு
அதுமட்டுமா, நடிகை மஞ்சுளா இறந்தபோது நான் தான் முதல் ஆளாக போய் நின்றேன். முரளி இறந்த போதும், பாலசந்தர் இறந்த போதும் கூட நான் தான் அங்கு இருந்தேன். அங்கு வந்து நெரிசலில் சிக்கிக் கொண்ட ரஜினிகாந்தை பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தேன்.

பாயும் புலிக்கும் உதவினேனே...
கமல்ஹாசனின் உத்தமவில்லன் பட பிரச்னையின் போது படம் திரைக்கு வர நான் தான் உழைத்தேன். கார்த்தியின் கொம்பன், விஷாலின் பாயும்புலி, பட பிரச்னைகளை சரிசெய்து படம் வெளிவர முற்சிகளை மேற்கொண்டேன்.

பத்து நாளில் ரகசியத்தை அம்பலமாக்குவேன்
நடிகர் சங்க உறுப்பினர்களுகாக உண்மையாக உழைத்திருக்கிறேன். அனாலும் என்னைப் பற்றி முறைகேடு செய்ததாக அவதூறு பரப்புகிறார்கள். தொடர்ந்து இதுபோல் பேசினால், 10 நாட்களில் அவர்களைப் பற்றியான உண்மை ரகசியங்களை வெளியிடுவேன். என் மனதை திறந்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேருக்கு சிக்கல் வரும்.

வெற்றி நிச்சயம்
நேர்மையான முறைப்படி தேர்தல் நடக்கும். என் அணி நிச்சயம் வெற்றிபெறும். என் அணிசார்பில் துணைத் தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் போட்டியிடுகிறார்கள். மற்ற வேட்பாளருக்கான லிஸ்ட் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும்" என்று பேசினார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications