“நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்கவில்லை”.. பாஜக நிர்வாகி சரத்குமார் பேட்டி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
"அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு நீங்க சொல்லும் அறிவுரை என்ன?" என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார், "நான் அறிவுரை சொல்ல முடியாது பாஸ்.. அவர் வளர்ந்த நடிகர். அவருக்கு நான் என்ன அறிவுரை சொல்வது? அரசியல்வாதியாக இன்னும் விஜய்யை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் ஃபீல்டுக்கு வந்திருக்கிறார்.

இனிமேல் தான் அவர் கொள்கை என்ன கோட்பாடு என்ன இதெல்லாம் கேட்டால் பெரிய பிரஸ் மீட் தர வேண்டும். அவர் சொல்லும் விஷயங்கள் சாதாரண விஷயங்கள் கிடையாது. நிறைய விஷயம் சொல்கிறார். பொருளாதாரத்தை மேம்படுத்தி எல்லோருக்கும் வீடு வசதியை உருவாக்குவோம் என்று சொல்கிறார். எப்படி என்று நான் கேட்கிறேன். காரணம் தமிழகம் 10 லட்சம் கோடி கடனில் உள்ளது. எப்படி மீண்டு வருவாங்க?
இலவச வீடு கொடுங்க.. வேண்டாம் என்று யார் சொன்னது? இந்த கடன் சூழலில் எப்படி கொடுப்பீர்கள் என்று நான் கேட்கிறேன். நான் இந்த உயிரைக் காப்பாற்றுவேன் என்று சொன்னால் அது எப்படி? யாராலும் முடியாத இந்த உயிரை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு மருத்துவம் இதுதான் என்று சொல்ல வேண்டும். பிரச்சனையை சொல்வதை விட அதைத் தீர்க்க என்ன தீர்வு என்ன என்பதைச் சொன்னால் நான் ரொம்ப சதோஷப்படுவேன். மக்கள் சந்தோசப்படுவார்கள்.
விஜய் இன்று வந்தவர். இதைவிட பெரிய பெரிய இயக்கங்கள் பெரிய பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவரை பற்றி நீங்கள் சுட்டிக்காட்டி கேட்டீர்கள் என்று சொன்னால் நான் பதில் சொல்லக் காத்திருக்கிறேன். விஜய் வரட்டும், தேர்தல் பிரச்சாரத்துக்குப் போகட்டும். என்னைப் போல விஜய்யும் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். இந்த மாதிரி கேள்வி கேட்க வையுங்கள் முதலில்.. நீங்களே ஒருவரை பெரியவராக உருவாக்காதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சரத்குமார், "2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அதனை பிறருக்கு விட்டுக் கொடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து இப்போதுள்ள ஆட்சியை மாற்றி அமைப்பதற்கு பாடுபடுவேன். 2026 சட்டசபை தேர்தல் எங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும்.
விஜய்க்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என தெரியவில்லை. இதுதான் அவரது அரசியல் புரிதலின் அளவு. அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் விஜய், தனது நிலைப்பாடுகளை தெளிவாக வைக்காமல், எல்லோரையும் நண்பர்களாகவும் எதிரிகளாகவும் கருதுவது போன்று நடந்து கொள்கிறார். இது தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "100 நாட்கள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பயனளிக்கும். மாநில அரசு 40 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மாநிலத்தில் 90 சதவீதம் மத்திய அரசு வழங்கும் நிதியிலிருந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் அதற்கான பெயரை பயன்படுத்தி வருகின்றனர்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications