நான் கேட்கிறேன்... விஜயகாந்த்துக்கு என்ன தகுதி இருக்கு?.. சரத்குமார்
மதுரை: முதல்வர் ஆவேன் என்று கூறி வருகிறாரே விஜயகாந்த், அந்தப் பொறுப்புக்கு வர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
மதுரையில் 5 இடங்களில் சரத்குமார் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பேசும்போது விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தார்.
சரத்குமார் பேச்சிலிருந்து...
எல்லா இடத்திலும் எழுச்சி
நான் தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியை காண முடிகிறது. மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றினார். அது மட்டுமின்றி சட்டசபையின் 110 விதியின் கீழ்அறிவித்த 185 திட்டங்களுக்கு செயல்முறை வடிவம் கொடுத்து அதனை நிறைவேற்றி இருக்கிறார். இதன் மூலம் மக்களை பற்றி சிந்திக்கும் முதல்வரை இந்த மாநிலம் பெற்று இருக்கிறது.
தொலைநோக்கு முதல்வர்
விவசாயிகள் ஆனாலும் சரி, தொழிலாளர்கள் ஆனாலும் சரி அவர்களுக்கென்று திட்டங்களை தயாரித்து ஒரு தொலைநோக்குடன் செயல்படும் முதல்வராக ஜெயலலிதா உள்ளார்.
பொய் வாக்குறுதிகள்
அதிமுகவை எதிர்க்கும் கூட்டணிகளை பற்றி உங்களுக்கு தெரியும். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பொய்யான வாக்குறுதிகளை திமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் அளித்து வருகின்றனர். திமுக - காங்கிரஸ் இடையே அமைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி.
டிரஸ்ஸை மாற்றி ஏமாற்றும் ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் தனது உடையை மாற்றி கொண்டு மக்களை ஏமாற்றுகிறார். மக்கள் பிரதிநிதிகள் இனி மக்களை தேடி செல்லக்கூடாது என்று ஸ்டாலின் கூறுகிறார். 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மையை இப்போது அவர் கண்டுபிடித்து இருக்கிறார்.
பொய் - பித்தலாட்டம்
திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை. பித்தலாட்ட அறிக்கை. காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது சுயவிளம்பரத்திற்காக தனிப்பட்ட விமர்சனங்களை செய்து வருகிறார்.
என்ன பேசுறார்னே புரியலையே
அடுத்ததாக மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. அப்படி புரிந்தால் தான் அவருக்கு பதில் சொல்ல முடியும். ஆனால் இவரை முதல்வராக்குவோம் என்று மக்கள் நலக் கூட்டணியினர் கூறுகிறார்கள். முதல்வராக அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. அவரை முதல்வராக ஏற்று கொள்ளவும் மக்கள் தயாராக இல்லை என்றார் சரத்குமார்.