நான் ஒரே ஆள் 10 பேரை சமாளிப்பேன்.. மோசமாக கமெண்ட் அடித்தவருக்கு சரத்குமார் வார்னிங்
திண்டுக்கல்: நான் ஒரு ஆள் 10 பேரை சமாளிப்பேன் என்று தன்னிடம் மரியாதை குறைவாக பேசிய நபருக்கு பதிலடி கொடுத்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
அதிமுக கூட்டணியில், திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டியிடுகிறார். ஸ்டார் பிரசார நபரான சரத்குமார், பிற தொகுதிகளில் அதிமுகவினருக்கு ஆதரவு பிரசாரம் செய்து வருகிறார்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து, சரத்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பித்தளைப்பட்டி பகுதியில் நத்தம் விஸ்வநாதனுடன் வேனில் நின்றபடி சரத்குமார் பிரசாரம் செய்தபோது, அங்குள்ள ஒரு டீக்கடையில் நின்றிருந்த ஒரு நபர் சரத்குமாரை பார்த்து தரக்குறைவாக விமர்சனம் செய்து சத்தமாக கமெண்ட் அடித்தார்.
வேன் சிறிது தூரம் கடந்து சென்றபோதிலும், அதை நிறுத்திய சரத்குமார், வேனை விட்டு இறங்கி அந்த டீக்கடைக்கு திரும்பிச் சென்றார். சரத்குமார் டீக்கடை நோக்கி போனதை பார்த்த தொண்டர்கள் பரபரப்படைந்தனர்.
டீக்கடையில் கமெண்ட் அடித்த நபரிடம் சென்ற சரத்குமார், நீங்க எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் மரியாதையுடன் பேசுங்கள். நான் ஒரு ஆள் 10 பேரை சமாளிப்பேன். தேர்தல் நேரம் என்பதால் அமைதியாக இருக்கிறேன் என கோபமாக பேசினார்.
அப்போது நத்தம் விஸ்வநாதனும், வேனை விட்டு இறங்கி, வந்து சரத்குமாரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.