ஜெயந்தி நடராஜனின் பெரியம்மா சரோஜினி வரதப்பன் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் பக்தவச்சலத்தின் மகளும், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பெரியம்மாவுமான சரோஜினி வரதப்பன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

சமூக சேவகியான சரோஜினி வரதப்பன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாக அவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

சரோஜினி வரதப்பனின் தந்தைதான் மறைந்த காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம். இவர்தான் தமிழகத்தில் கடைசியாக முதல்வர் பதவியை வகித்த காங்கிரஸ் காரர் ஆவார். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பெரியம்மாவார் சரோஜினி வரதப்பன்.

பெரியம்மா மறைவுச் செய்தி அறிந்ததும் சென்னை விரைந்துள்ளார் ஜெயந்தி நடராஜன்.

கருணாநிதி இரங்கல்:

சரோஜினி வரதப்பன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், பெரியவர் எம். பக்தவத்சலம் அவர்களின் திருமகளாரும், சமூகத் தொண்டு, மகளிர் நலம், கல்விப் பணி போன்றவற்றில் பெரிதும் அக்கறை காட்டி வந்தவரும், என்னிடம் பேரன்பு கொண்டவருமான மூதாட்டி சரோஜினி வரதப்பன் அவர்கள் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

முன்னாள் முதல்வர், பெரியவர் எம்.பக்தவத்சலம் அவர்களுக்கு, 1997-98ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் "அரசின் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்" என்று அறிவித்திருந்தேன். அந்த உறுதிமொழிக்கேற்ப பக்தவத்சலம் அவர்களின் நினைவிடம் அமைக்கப்பட்டு, 13-3-1998 அன்று நான் திறந்து வைத்தேன். அந்த விழாவில் வரவேற்றுப் பேசிய சரோஜினி வரதப்பன் அவர்கள் "இன்று நாம் எல்லோரும் பத்து ஆண்டுகளாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கிய காரியத்தை நமது கலைஞர் அவர்கள், அவருடைய காலத்தில் அதை பூர்த்தி செய்திருக்கிறார்கள். எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை - எப்படி நன்றி சொல்வது என்று. மிக அற்புதமாக அழகிய இந்த மண்டபத்தை மிக நல்ல எண்ணத்துடன் இங்கு உருவாக்கி, உள்ளே அவர்களின் உருவச் சிலையையும் வைத்திருக்கிறார்கள். கலைஞர் அவர்களின் எத்தனையோ பெரிய சாதனைகளில் இதையும் ஒரு பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டது இப்போதும் என் நினைவுகளில் இருக்கின்றது.

சரோஜினி வரதப்பன் அவர்கள் நான் பொறுப்பிலே இருந்த போது மகளிர் நலன்களுக்காகவும், பொதுப் பிரச்சினைகளுக்காகவும் உரிமையோடு என்னைச் சந்தித்து அவற்றைப் பற்றி எடுத்துரைத்து, தீர்வு கண்டு செல்வார்கள். அவர்களின் மறைவு மகளிர் குலத்திற்கே ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், குறிப்பாக மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் அவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+