சசிகலா ஒரு பெண் தாதா, குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்... ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு
சிசகலா ஒரு பெண் தாதா, குண்டர்களை வைத்து மிரட்டுகிறார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கியுள்ளார்.
ஈரோடு: சசிகலா ஒரு பெண் தாதாவாக மாறி விட்டார். குண்டர்களை விட்டு மிரட்டுகிறார். பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார். அசிங்கமாக நடந்து கொள்கிறார். அவர் பெயரைக் கேட்டாலே பெண்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சசிகலாவை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு பெண் தாதாவாக அவர் மாறி விட்டதையே காட்டுவதாக அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சசிகலாவுக்கும் ஆதரவு இல்லை, ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் கூறினார். செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசியதிலிருந்து:
தாதாவாக மாறி விட்டார்
கூவத்தூர் ரிசார்ட்டில் 90 எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து குண்டர்களை விட்டு மிரட்டுகிறார். பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார். செல்போன்களைப் பிடுங்கிச் செல்வது, கேமராக்களை எட்டி உதைப்பது, ஓ.பன்னீர் செல்வம் சிரிப்பதைப் போல அசிங்கமாக நடித்துக் காட்டுவது, பேசுகிற தோரணையே மிரட்டுவது போல உள்ளது என்று சசிகலா ஒரு பெண் தாதாவாகவே மாறி விட்டார்.
முகம் சுளிக்கிறார்கள்
தமிழக மக்களிடையே சசிகலாவுக்கு கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது. சசிகலா பெயரைச் சொன்னாலே முகம் சுளிக்கிற நிலையில்தான் உள்ளனர். கிராமத்துப் பெண்களம் சரி, படித்த இளைஞர்களம் சரி சசிகலாவுக்கு எதிராக உள்ளனர். இதையெல்லாம் ஆளுநர் கவனத்தில் கொண்டாக வேண்டிய நிலை உள்ளது.
ஆளுநர் பொறுமை காக்கலாம்
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வர வேண்டியுள்ளது. அது வரும் வரை ஆளுநர் நிதானம் காக்கலாம். அதன் பிறகு யாரை அழைப்பது என்பதை முடிவு செய்தால் நல்லது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதிமுக உள் விவகாரத்தில் ஒரு போதும் தலையிட மாட்டோம்.
ஆளுநர் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்
எங்களைப் பொறுத்தவரை சசிகலாவையும் ஆதரிக்கவில்லை, பன்னீர் செல்வத்தையும் ஆதரிக்கவில்லை. சசிகலா தரப்பில் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார்கள். அதில் உள்ள கையெழுத்து போலியா அல்லது உண்மையா என்பதை ஆளுநர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
திருநாவுக்கரசு என்ன சொன்னாலும் செல்லாது
எங்களது முடிவை நாங்கள் ராகுல் காந்தியிடம் சொல்லி விட்டோம். திருநாவுக்கரசர் சொல்வது செல்லாது. அவர் அவரது கருத்துக்களைச் சொல்லி வருகிறார். அது காங்கிரஸின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்காது. நானும், ப.சிதம்பரமும் மற்ற தலைவர்களம் அதிமுக விவகாரத்தில் தலையிடத் தேவையில்லை என்று ராகுல் காந்தியிடம் சொல்லி விட்டோம்.
சாமிக்கு எப்போதுமே அதிமுக மகளிரிடம் ஈர்ப்பு இண்டு
சுப்பிரமணிய சாமிக்கு எப்போதுமே அதிமுக மகளிரிடம் ஈர்ப்பு உண்டு. சில வருடங்களுக்கு முன்பு கூட ஹைகோர்ட்டில் அவருக்கு அதிமுக மகளிர் பெரிய வரவேற்பெல்லாம் கொடுத்தார்கள். அவர் பேசுவதையெல்லாம் கருத்தில் கொள்ளவே கூடாது.
நல்ல டான்ஸ்!
அதிமுக எம்.எல்.ஏக்கள் டான்ஸ் ஆடுவதாக வந்த வீடியோவை நானும் பார்த்தேன். மிகவும் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாலு சுவருக்குள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகளெல்லாம் செய்து தரப்படுகிறது என்றார் அவர்.