சசிகலா கொடும்பாவியை எரித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கொடும்பாவியை எரித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரி, முத்தியால் பேட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உருவபொம்மையை எரித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் சமாதியில் தியானத்தை முடித்து புது உத்வேகத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இதையடுத்து அவரின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கொடும்பாவியை எரித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதேபோல் சங்கரன் கோவில் அருகே குருக்கள் பட்டியில் மேலநீலிதநல்லூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் முருகையா பாண்டியன் தலைமையில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உருவ பொம்மை எரித்து சசிகலா ஆதரவாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிர்பாக செயல்படும் பன்னீர்செல்வத்தை கண்டித்து போடியில் அவரது உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் போடி நகரப்பகுதியில் பதட்டமான சுழல் நிலவுகிறது.