எண்ணிப் பார்த்துட்டேன், சசிகலாவிடம் 89 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர் - இளங்கோவன் தகவல்
சசிகலாவிடம் 89 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். நான் எண்ணிப் பார்த்து விட்டேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: சசிகலாவுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் இருப்பவர்களை எண்ணிப் பார்த்தேன். 89 பேர்தான் வருகின்றனர் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது:
சசிகலாவுடன் எம்.எல்.ஏக்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை நானும் பார்த்தேன். அதில் உள்ள எம்.எல்.ஏக்களை எண்ணிப் பார்த்தேன். 89 பேர் வருகின்றனர். நீங்களும் எண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.
அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை விடுவிக்க முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்ய அவருக்கு உரிமை உண்டு. அவர் டிஜிபியுடன் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் உள்ளார். எனவே இதை அவரால் செய்ய முடியும். செய்ய வேண்டும்.
பாஜக கொல்லைப்புறமாக வந்தாலும் சரி, வாசல் படியாகவே வந்தாலும் சரி அல்லது பூமியைத் துளைத்துக் கொண்டு வந்தாலும் சரி ஒரு போதும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவே முடியாது என்று இளங்கோவன் கூறினார்.