முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதா? சசிக்கு எதிராக தொடரும் போராட்டம்- போஸ்டர்கள் கிழிப்பு
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் பதவியோடு முதல்வர் பதவியேற்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் கூறி வருவது ஓபிஎஸ் ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது ஆர்கே நகரில் போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் எனவும் அதிமுக நிர்வாகிகளும் சில அமைச்சர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றுதான் தற்போது மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அந்தத் தீர்மான நகலுடன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை வழங்கி வருகின்றனர். முதன் முதலாக கர்நாடக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தியும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்
சசிகலா பொதுச்செயலராவதற்கே அதிமுக தொண்டர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சென்னை, தேனி, கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. ஏராளமான அதிமுக தொண்டர்கள் சசிகலாவிற்கு எதிராக போராடி வருகின்றனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு
தற்போது முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையால் தென்மாவட்டங்களில் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர். தென்மாவட்ட தேவர் சமூகத்தினர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் பொதுச்செயலராகவும் வேண்டும் என விரும்புகின்றனர்.

ஒபிஎஸ் அறிக்கை
அதே நேரத்தில் சின்னம்மா பொதுச் செயலாளராக ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் ஓபிஎஸ்சிடம் இருந்து முதல்வர் பதவியையே பறிக்கவும் முயற்சிகள் நடப்பதால் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

பேனர் கிழிப்பு
கம்பம் - குமுளி சாலையில் சசிகலாவுக்கு ஆதரவாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் சசிகலா படத்தின் மீது சாணத்தை சிலர் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா ஆதரவாளர்கள் தண்ணீர் ஊற்றி சாணத்தை அகற்றினர்.

காதில் பூ வைப்பதா?
பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தங்களின் காதுகளில் பூக்களை வைத்துக்கொண்டு, சசிகலாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். 30 ஆண்டுகளாக அம்மா இருந்தார், அந்த இடத்தில் சசிகலாவை வர விடமாட்டோம். எங்கள் காதுகளில் பூ வைக்க வேண்டாம் என்று ஆத்திரத்துடன் பெண்கள் தெரிவித்தனர்.

சசிகலா தரப்பு அதிர்ச்சி
திண்டுக்கல் நகரிலும் பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. சசிகலா சார்ந்த தேவர் சமூகத்தினர் அதிகம் உள்ள தென்மாவட்டங்களிலேயே இப்படி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது சசிகலா தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications