ஜூன் மாதத்தில் சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்... நடராஜன் திடுக் தகவல்!
ஜூன் மாதத்தில் சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக ம.நடராஜன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை : வருகிற ஜூன் மாதத்தில் சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக சசிகலாவின் கணவர் ம.நடராஜன் தெரிவித்துள்ளார். பரோல் வாங்கி ஒரு நாளோ ஒரு வாரமோ இந்த பிரச்சாரம் நடைபெறும் என்று நடராஜன் கூறியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியின் விவரங்கள் : உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் போது எந்த பயமும் இல்லை, என்னுடைய தேவைகளையும் ஆசைகளையும் வரையறுத்துக் கொண்டதால் எனக்கு உயிர் போய்விடுமோ என்ற பயம் எப்போதுமே இருந்ததில்லை. இப்போது என் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வருகிற ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் என்னுடைய மனைவி சசிகலாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஒரு நாள் பரோல் வாங்கியாவது இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்வோம், தமிழகத்தை சுற்றி வர ஒரு நாள் போதாதா?

எங்கள் குடும்பத்திற்கு மட்டும் ஏன்?
வருமான வரி சோதனை சட்டப்படி இருந்தால் ஏன் மற்றவர்களுக்கு அந்த சட்டம் நீளவில்லை. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள் என்று நானே பட்டியல் தருகிறேன்.

தினகரனுக்கு வாழ்த்துகள்
டிடிவி. தினகரன் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தினகரன் மக்களால் ஓரளவிற்கு ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது. மத்திய, மாநில அரசின் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் ஒரு மாற்றாக தினகரனை நினைப்பதாகத் தான் தேர்தல் முடிவை பார்க்க வேண்டும்.

தினகரனை கிருஷ்ணப்ரியாவை விமர்சிக்கக் கூடாது
தினகரனுக்கு எதிராக கருத்து சொல்லும் கிருஷ்ணப்ரியா தவறாக வழிநடத்தப்படுகிறார். நீரடித்து நீர் விலகிடாது நாங்கள் எல்லாம் சொந்தம், கிருஷ்ணப்ரியாவிற்கு வேறுபட்ட கருத்து இருந்தாலும் பொதுவாழ்வில் இருக்கும் தினகரனை எப்படி விமர்சிக்கலாம். நான் கிருஷ்ணப்ரியாவை சந்திக்க உள்ளேன், சசிகலா சிறை செல்லும் முன் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை கிருஷ்ணப்ரியாவிடம் கொடுத்துவிட்டு சென்றார். அதனை வைத்துக் கொண்டு தான் தான் எல்லாம் என்று ஆட்டம் போடக்கூடாது.
வீடியோ ஒரு ஆவணம் அவ்வளவு தான்
எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் வீடியோ வெளியிடப்பட்டிருக்கும், அது ஒரு ஆவணம் தான். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது அங்கேயே இருந்த அமைச்சர்களே சந்தேகம் எழுப்பியதால் தான் வீடியோ வெளியானது. அவர் உயிருடன் இருக்கும் போதே வெளியிட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள் ஆனால் சசிகலா தான் ஜெயலலிதாவின் இமேஜ் காக்கப் பட வேண்டும் என்று வெளியிடவில்லை, எப்படி வெளியிட்டாலும், எங்கு வெளியிட்டாலும் அது ஒரு பொது ஆவணம் எப்போது இருந்தாலும் அது வெளியாகும் என்றும் நடராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications