கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டில் இன்று மாலைக்குள் சசிகலா சரண்?
உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் தேவை என முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலைக்குள் சசிகலா சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சரணடைய கால அவகாசம் தேவை என்ற சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது. இதையடுத்து இன்று மாலைக்குள் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதி செய்தவர்கள்; குற்றவாளிகள் என்பதை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. சசிகலா உள்ளிட்ட மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

சரணடைய உத்தரவு
இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் ஊழல் தொடர்பாகவும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் கூட்டு சதி குறித்தும் மிகக் கடுமையாக சாடியிருந்தனர். ஜெயலலிதா மரணடைந்ததால் அவர் மீதான வழக்கு மட்டும் முடித்து வைக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்டோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று சசிகலா சரணடையவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றத்தில் இன்று கால அவகாசம் கோரினார் சசிகலா.

சசி கோரிக்கை நிராகரிப்பு
நீதிபதிகள் பிசி கோஷ் மற்று அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்தான் சரணடைய கால அவகாசம் கேட்கப்பட்டது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துள்சி ஆஜராகி இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் நீதிபதிகள் எக்காலத்திலும் கால அவகாசமே தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

வேறுவழியே இல்லை
இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தாக வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலைக்குள் சசிகலா சரணடைவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications