குடிசையில் புகுந்து எம்.ஜி.ஆர். பாணியில் பாட்டியை கட்டிப் பிடித்த சசிகலா !
சென்னை: கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற சசிகலா குடிசை பகுதி மக்களை திடீரென சந்தித்து பேசினார்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக கடந்த 27 ஆண்டுகளாக ஜெயலலிதா இருந்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்றினார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இதையடுத்து ஆட்சியையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இதற்காக எம்.எல்.ஏக்களையும் கடத்தி கூவத்தூரில் அடைத்து வைத்துள்ளார்.
இதனிடையே சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஆதரவும் அவருக்கு அதிகரித்து வருகிறது. யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற பரபரப்பும் நிலவி வருகிறது.
பொது மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் சசிகலா எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே நம்பி இருக்கிறார். கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை சசிகலா தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். 2 நாட்களாக ஏற்கனவே சந்தித்து தம்மை ஆதரிக்கும்படியும், கேட்டுக்கொண்ட சசிகலா இன்றும் ரிசார்ட்டுக்கு சென்றார்.
அப்போது திடீரென மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பாணியில் அந்தப் பகுதியில் உள்ள குடிசைக்குள் புகுந்து ஒரு பாட்டியை கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் சசிகலா. அப்போது அங்கிருந்தவர்கள் ஆட்சியை கைப்பற்ற என்ன வெல்லாம் செய்கிறார்கள் என்று முனுமுனுத்தனர்.
ஒருபுறம் எம்.ஜி.ஆர்., பாணியில் வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் உணவு வழங்கி அசத்தி வருகிறார். தற்போது சசிகலா அதைவிட ஒரு படி மேலே யோசிக்கத் தொடங்கியுள்ளார். யாருக்கு என்ன வித்தை கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.