எடப்பாடி பழனிச்சாமிதான் நெ.1- அடுத்துதான் ஓபிஎஸ்.. சொல்லாமல் சொன்ன அதிமுக அறிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததில் அதிருப்தி இருப்பதை சசிகலா தரப்பு பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததில் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா நடராஜன் தரப்புக்கு உடன்பாடில்லை என்பதை பகிரங்கப்படுத்தியிருக்கிறது அதிமுக வெளியிட்ட அறிக்கை.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது துறைகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க நினைத்தது சசிகலா தரப்பு. ஆனால் மத்திய அரசின் நெருக்கடியால் அமைச்சரவையில் 2-வது இடத்தில் இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்திடம் அந்த துறைகளை ஒப்படைத்தார் ஆளுநர் வித்யாசகர் ராவ்.
இதில் கடும் அதிருப்தி அடைந்தது சசிகலா தரப்பு என்பதை நாம் தொடர்ந்து சுட்டிகாட்டி வந்தோம். தற்போது இந்த அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறது சசிகலா தரப்பு.

சாமி சென்டிமெண்ட்
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நேற்று அதிமுக அறிவித்தது. வழக்கமாக அதிமுகவின் வேட்பாளர் பட்டியல், பொறுப்பாளர் நியமனங்களில் 'சாமி' சென்டிமெண்ட் எப்போதும் இருக்கும்.
|
ஆச்சரிய அறிக்கை
சாமி பெயர்களைக் கொண்ட ஊரில் இருந்துதான் வேட்பாளர் பட்டியல் தொடங்கும் என்பது அதிமுகவை கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் நேற்றைய பொறுப்பாளர்கள் அறிவிப்பு அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

எடப்பாடி பழனிச்சாமி
அதில் எடப்பாடி பழனிச்சாமியை உள்ளடக்கிய அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல் முதலில் இடம்பெற்றிருந்தது. இதற்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துவதுதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

ஓபிஎஸ்
3-வதாகதான் ஓ. பன்னீர்செல்வத்தை உள்ளடக்கிய திருப்பரங்குன்றம் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். என்னதான் மத்திய அரசு ஓ. பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதாவின் துறைகளை ஒப்படைத்திருந்தாலும் எங்கள் தளபதி எடப்பாடி பழனிச்சாமிதான் என்பதை அதிமுக நிர்வாகிகளுக்கு சசிகலா தரப்பு பகிரங்கமாக சுட்டிக்காட்டவே இப்படியான அறிக்கை வெளியிடப்பட்டது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications