தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளராக சசிகலா நடராஜன்- அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி போட்டி?
சென்னை: தஞ்சாவூர் தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளராக சசிகலா நடராஜனும் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணப்பட்டுவாடா புகாரில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை நிறுத்தியது தேர்தல் ஆணையம். பின்னரும் பணப்பட்டுவாடா தொடர்ந்ததால் 2 தொகுதிகளின் தேர்தலுமே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் உடல்நலக் குறைவால் காலமானார். எம்.எல்.ஏ. பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அவர் காலமானார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.
துணைப் பொதுச்செயலராகும் சசிகலா
தற்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் நிறுத்தப்படலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தோழி சசிகலா, அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.
தஞ்சையில் போட்டி
இதன் மூலம் அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்பது சசிகலாவின் உறவினர்களின் வியூகம். இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சசிகலா நடராஜன் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி
மேலும் அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறதாம். தற்போதைய சூழ்நிலையில் தாம் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதில் செந்தில்பாலாஜி மும்முரமாக இருக்கிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த சீனிவேல் குடும்பத்தினர் ஒருவரே வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.