சசிகலாவிற்கு சொந்த மாவட்டத்தில் எதிர்ப்பு - போஸ்டரில் சாணம் வீச்சு
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்படுவதற்கு அவரது சொந்த மாவட்டமான தஞ்சாவூரிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. போஸ்டரில் சாணம் வீசியுள்ளர்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த பொருப்புகளை ஜெ.வின் தோழி சசிகலா ஏற்க வேண்டும் என்று அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் மட்டும் ஆதரவு கடிதங்கள் கொடுத்துவிட்டு நேரிலும் சசிகலாவிடம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், தொண்டர்கள் சசிகலா பதவிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெ. அண்ணன் மகள் தீபா கட்சி தலைமை ஏற்க வர வேண்டும் என்று சில அதிமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.
அதே போல சசிகலா பொறுப்புக்கு வரவேண்டும் என்று சின்னம்மா என்ற வாசகத்துடன் கட்சியின் பொருப்பாளர்கள் வைக்கும் பதாகைகளில் சசிகலா படத்திற்கு மட்டும் அவமரியாதை செய்வதுடன் கிழிப்பதும் நடந்து வருகிறது.
சசிகலா மீது சாணம் வீச்சு
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தினங்களுக்கு முன் டிவிஎஸ் டோல்கேட், மத்திய பஸ்நிலையம், தலைமை தபால் நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டும், சாணம் பூசப்பட்டிருந்தது.
போலீஸ் விசாரணை
இந்த செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் கேமிராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று எம்ஜிஆர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சசிகலா படங்கள் மீது சாணம் பூசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் சாணம் வீச்சு
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு எம்எல்ஏ அலுவலகம், ரயிலடி, பழைய பேருந்து நிலையம், உள்பட 5 இடங்களில் கட்சி நிர்வாகிகள் சசிகலா படத்துடன் பதாகைகள் வைத்தனர். இன்று காலை அனைத்து பதாகைகளிலும் சசிகலா படத்தில் மட்டும் மாட்டுச் சாணம் அடிக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் தண்ணீர் ஊற்றி கழுவி வருகின்றனர். சசிகலா படம் அவமதிப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த மாவட்டத்தில் ஆதரவில்லை
சசிகலா பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும், தென் மாவட்டங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இப்போது அவரது சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் உள்ள பேராவூரணியில் போஸ்டருக்கு சாணம் அடித்து எதிர்ப்பு தெரிவித்து வருவது சசிகலா குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.