Exclusive: சர்ச்சையை கிளப்பும் சசிகலா புஷ்பா வெறும் அம்புதான்.. ஏவும் வில் யார் தெரியுமா?
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பியான, சசிகலா புஷ்பா அவ்வப்போது, சசிகலா நடராஜனுக்கு எதிராக புகார்களை கிளப்பிவிடுவதில் உள்ள மர்மம் விலகியுள்ளது.
சென்னை: தன்னை கன்னத்தில் அறைந்துவிட்டதாக ராஜ்யசபாவில் புகார் கூறிய முதல்வர் ஜெயலலிதா பற்றியே நல்லவிதமாக பேட்டியளிக்கும் சசிகலா புஷ்பா, சசிகலா நடராஜனுக்கு எதிராக மட்டும், அவ்வப்போது புயலை கிளப்பி பேசுவது ஏன் என்பதை யோசித்துள்ளீர்களா?
இதன் பின்னணியில் இருப்பது மிகப்பெரிய நெட்வொர்க் என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தில். சசிகலா புஷ்பா வெறும் அம்பு என்பதுதான் அவர்கள் சொல்லும் கருத்து.
சசிகலாவுக்கு எதிராக சாட்டையை சுழற்றி வருபவர் அதிமுகவிலிருந்த நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா. மத்திய பா.ஜ.க.அரசின் மூத்த அமைச்சர்கள் பலரும் இவருடன் நட்பில் இருக்கிறார்கள்.
உள்ளே வந்த உளவுத்துறை
தமிழக அரசும் அதிமுக கட்சியும், ஜெயலலிதாவின் இன்றைய உடல் நல பிரச்சினையை காரணமாக வைத்து, சசிகலாவின் பிடியில் சென்று விடக்கூடாது என்பது மத்திய அரசின் ஒன் லைன் அஜெண்டா ! அந்த வகையில், உளவுத்துறை மூலமாகவே சில காய்களை நகர்த்தி வருகிறது.
சசிகலா அதிகாரம் உடைப்பு
அதற்கான துருப்பு சீட்டாக சசிகலா புஷ்பாவை இயக்குகிறது பா.ஜ.க. தலைமை. குறிப்பாக, சசிகலாவுக்கு எதிரான விசயங்களை பூதாகரமாக்கவும் சசிகலாவின் அதிகார ஆளுமையை உடைப்பதும் தான் புஷ்பாவுக்கு மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள அசைண்மெண்ட். அதை நோக்கியே பயணிக்கிறார் புஷ்பா.
விவரங்களை தருவதே உளவுத்துறைதான்
அவ்வப்போது, இடைவெளி விட்டு விட்டு புது புது குண்டுகளை வீசுவதற்கேற்ப விசயங்களை சேகரித்து அவ்வப்போது தந்து வருகிறது மத்திய உளவுத்துறை என்கிறது தமிழக அரசின் உள்துறை அதிகாரிகள் வட்டாரம். சசிகலா நடராஜன் கையில் கட்சி சென்றுவிடாமல் இருக்க, கட்சியினர் மத்தியில் அவருக்கு எதிராக எதிர்ப்பை தூண்டுவதே சசிகலா புஷ்பா பணியாம்.
ஓ.பி.எஸ்தான் முக்கியம்
தங்களுக்கு வேண்டப்பட்ட ஓ.பி.எஸ்சை முன்னிருத்தி தமிழகத்தில் மறைமுக ஆட்சி நடத்தவே பாஜக தலைமை இந்த அசைன்மென்ட்டை சசிகலா புஷ்பாவுக்கு கொடுத்து, அவரை போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது.