அதிமுக ஆபீசில் கணவர் சிந்திய ரத்தத்துக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்.... இது சசிகலா புஷ்பா 'சபதம்'
அதிமுக அலுவலகத்தில் கணவர் சிந்திய ரத்தத்துக்கு பதிலைப் பெறும் வகையில் அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார் சசிகலா புஷ்பா.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது கணவர் தாக்கப்பட்டதற்கு பதிலடி தரும் வகையில் கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவேன் என சசிகலா புஷ்பா அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் யார் என்ற கேள்வி எழுந்தது. சசிகலா நடராஜன் தம்மை பொதுச்செயலராக்கிக் கொள்ள தீவிர முனைப்பில் இருந்த நேரம்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பொதுச்செயலர் பதவிக்கான விண்ணப்பத்தை வாங்க சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் சென்றிருந்தார். அப்போது சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.
ரத்த வெள்ளத்தில் லிங்கேஸ்வர்
இதில் லிங்கேஸ்வர் மூக்கு உடைக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட தப்பினார். இதை அப்போது அங்கு கூடியிருந்த போலீசாரும் கூட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
இது தொடர்பாக லிங்கேஸ்வரையே போலீசார் கைது செய்தனர். இதனால் நீதிமன்றத்தின் கதவுகளை சசிகலா புஷ்பா தட்ட ஒருவழியாக லிங்கேஸ்வர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா புகார் கொடுத்தார்.
தேர்தல் தேவை
அதிமுக சட்டவிதிகளின் படி தொண்டர்களால் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும்; தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் பொதுச்செயலர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா வலியுறுத்தி வருகிறார். இதையேதான் இன்று தம்மை சந்தித்த எடப்பாடி கோஷ்டியிடமும் சசிகலா புஷ்பா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சசிகலா புஷ்பா சபதம்
அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கணவர் லிங்கேஸ்வர் சிந்திய ரத்தத்துக்கு தமக்கு பதில் கிடைக்க வேண்டும் என்பதில் சசிகலா புஷ்பா உறுதியாக இருக்கிறார். அதுவும் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் சேரும் நிலையிலும் சசிகலா புஷ்பா தமது நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருப்பது அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.