சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக ஏற்ககூடாது.. தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா புஷ்பா கடிதம்
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் எம்பி சசிகலா புஷ்பா, இப்போது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது முறையான வழி அல்ல என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா, நியாயமான மற்றும் நேர்மையான முறையில் பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்த உத்தவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சிகளின் அடிப்படை விதிகளின்படி, உறுப்பனர்கள் ஒன்று கூடி, வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், புற வழியில் கட்சியின் தலைமைக்கு வந்துள்ள சசிகலாவின் நியமனத்தை எந்தக் காரணம் கொண்டும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் சசிகலா புஷ்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை என்று குரல் எழுப்பிய சசிகலா புஷ்பா, துரோகி என்று பட்டம் சுட்டப்பட்டு ஜெயலலிதாவால் போயஸ் தோட்ட வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சசிகலாவை எப்படி அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்திற்கு தற்போது கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications