என்னையே சந்திக்க மறுப்பதா? 'அக்கா' சசிகலா மீது தம்பி திவாகரன் கடும் கோபம்!
பெங்களூரு: தம்மை சந்திக்க 'அக்கா' சசிகலா தொடர்ந்து மறுத்து வருவதால் தம்பி திவாகரன் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி மகன் விவேக் மற்றும் வழக்கறிஞர்களை மட்டுமே சந்தித்து வருகிறார். திவாகரன் தரப்பில் இருந்து யார் போனாலும் சந்திக்க மறுத்துவிடுகிறார்.
திவாகரன் மகன் ஜெயானந்த் ஒருமுறை சசிகலாவை சந்தித்த போதும் விவேக்கிடம் எல்லாம் சொல்லிவிட்டேன் என முகம் கொடுக்காமலேயே பேசினார் சசிகலா. தற்போது தினகரன், டெல்லி திஹார் சிறையில் உள்ள நிலையில் அதிமுகவை கைப்பற்ற திவாகரன் தரப்பு முயற்சிக்கிறது.
விவேக்கு பதவி?
இதற்காகவே தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வைத்திருக்கிறார் திவாகரன். இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவி, இளவரசி மகன் விவேக்குக்கு தரப்படலாம் என பேச்சுகள் அடிபடுகின்றன.
சசியை சந்திக்க முயற்சி
இதில் கடும் கொந்தளிப்படைந்த திவாகரன், என் மகனைவிட விவேக் முக்கியமா? என கொந்தளித்து பெங்களூருக்கு பறந்து போனார். பெங்களூருவிலேயே முகாமிட்டு சசிகலாவிடம் மகனுக்கு பதவி வாங்குவது என மும்முரமாக இருந்தார் திவாகரன்.
சந்திக்க மறுத்த சசி
ஆனால் சசிகலாவோ திவாகரனை சந்திக்கவே மறுத்துவிட்டாராம். இதனால் வெறுத்துப் போன விரக்தியில் திவாகரன் மன்னார்குடி திரும்பி, சசிகலாவை உறவுகளிடம் திட்டி தீர்த்து வசைபாடி வருகிறாராம்.
விவேக் பிஸி
இதனிடையே ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆரை நிர்வகித்து வரும் விவேக், சசிகலா, தினகரன் புராணம் பாடுவதை நிறுத்த கூடாது என புதிய உத்தரவிட்டுள்ளாராம். ஓபிஎஸ்- ஈபிஎஸ் பேச்சுவார்த்தை இல்லை என்கிறபோது எப்படியும் அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவி கிடைத்துவிடும் என பெருநம்பிக்கையில் இருக்கிறாராம் விவேக்.