தனிக்கட்சிக்கு முன்னோட்டம் பார்க்கும் சசிகலா கோஷ்டி! உதயமானது டிடிவி பேரவை!!
தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக சசிகலா கோஷ்டியினர் டிடிவி பேரவை என்ற பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: தனிக்கட்சியை தொடங்குவதற்கு முன்னோட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக டிடிவி பேரவை உதயமாகியுள்ளது.
அதிமுகவை கைப்பற்ற துடித்த சசிகலா கோஷ்டிக்கு சிறைவாசங்களே பரிசாக கிடைத்தன. இப்போது சசிகலா அண்ட் கோவை ஒரு எம்.எல்.ஏ. கூட ஆதரிக்காத நிலைதான் இருக்கிறது.
தனிக்கட்சி ஆலோசனை
இதில் ரொம்பவே நொந்துபோய் விரக்தியில் இருக்கிறது சசி அண்ட் கோ. டெல்லியின் நெருக்கடியும் அடுத்தடுத்து தீவிரமாகும் நிலையில் இதில் இருந்து தப்பிக்க தனிக் கட்சியை தொடங்கலாம் என தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள் சசிகலா உறவினர்கள்.
பாமக பாணியில்...
தனிக்கட்சியைத் தொடங்கி பாமக பாணியில் அரசியல் செய்யலாம். 2019 லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பதுதான் சசிகலா உறவினர்களின் தீவிர ஆலோசனையாக இருக்கிறதாம்.
டிடிவி பேரவை
இதன் முதல் கட்டமாக தினகரன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், மன்னார்குடி பகுதிகளில் டிடிவி பேரவையின் பெயரில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
எங்களால் முடியாதா?
தஞ்சாவூர், மன்னார்குடி பகுதிகளில் தனிக்கட்சி குறித்து ஜாதி ரீதியாகவும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய சசிகலா உறவினர்கள், பணம்தான் கொட்டி கிடக்கிறதே.. ஒரு கட்சியை ஜாதிகாரர்களை வைத்து நடத்த முடியாமல் போகும்.. அதிமுகவுக்கே குறிவைத்தோம்.. அது தப்பிவிட்டது. எங்களை மீறி இந்த பகுதியில் யாரும் நுழைய முடியாத நிலையை உருவாக்குவோம் என்கின்றனர்.