சொத்துக்குவிப்பு வழக்கு.. சசிகலாவின் சீராய்வு மனு விசாரணை தள்ளிப்போனது.. பின்னணியில் பரபர காரணம்
சென்னை: சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை நடத்தப்போவதில்லை. நீதிபதிகள் அமர்வில் ஏற்பட உள்ள மாற்றம் காரணமாக விசாரணை தள்ளிப்போயுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் 1.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் திருத்தப்பட்ட பட்டியல் இன்று வெளியானது.

விசாரணை இல்லை
அப்போது சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்த காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.

கோரிக்கை
சசிகலாவின் சீராய்வு மனுவை நீதிபதிகள் அமிதவராய் கோஷ், ரோஹின்டன் நாரிமன் அமர்வு இன்று விசாரிக்கவிருந்தது. ஆனால், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர், முகுல் ரோதக்கி நேற்று, நீதிபதி ரோஹின்டன் நாரிமனை சந்தித்து, ரோஹின்டன் நாரிமன் இந்த அமர்வில் இருக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.

தந்தை வக்கீல்
இதற்கு காரணம், ரோஹிண்டன் நாரிமனின் தந்தை பாலி நாரிமன் (காவிரி வழக்கில் கர்நாடகாவிற்காக ஆஜராகுபவர்) ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா-சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்புக்காக ஆஜரானவர். எனவே அவரது மகன் சீராய்வு மனு விசாரணை அமர்வில் இருக்க கூடாது என்பது முகுல் ரோதக்கி கேட்டுக்கொண்டார்.

நீதிபதி சம்மதம்
இக்கோரிக்கையை அறிந்த ரோஹிண்டன் நாரிமன், இவ்வழக்கிலிருந்து தன்னைவிடுவித்துக்கொண்டுள்ளார். எனவே சீராய்வு மனு விசாரணை தாமதமாகியுள்ளது. மறுபடியும் சீராய்வு மனு விசாரணை எப்போது வரும் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications