ஜெ. வாரிசை தெருவில் திரிய விட்ட சசிகலா குடும்பம்.. வேடிக்கை பார்க்கும் அதிமுகவினர்!
சென்னை: ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகள் தீபாவும், தீபக்கும். ஆனால் இவர்களை இன்று தெருவில் திரிய விட்டுக் கொண்டுள்ளது சசிகலா குடும்பம். இதை அதிமுகவினர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
ஜெயலலிதா இருந்தவரை அவரைப் போற்றிப் பாடி வந்த அதிமுக தலைவர்கள் இன்று தீபா - தீபக்குக்கு உதவிக்கு வர முன்வரவில்லை.
ஒரு அமைச்சர் கூட ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு உதவ முன்வரவில்லை. எம்.எல்.ஏக்கள் யாரும் ஆதரவாக இல்லை. இதற்கு அதிமுகவினர் சொல்லும் காரணம் என்னவாக இருக்கும் என்றால், அம்மாவால் நிராகரிக்கப்பட்டவர் தீபா என்பது.

விரட்டியடிக்கப்பட்ட தினகரன்
உண்மையில் தினகரனைத்தான் அதிமுகவை விட்டே நீக்கியிருந்தார் ஜெயலலிதா. தனது வீட்டை விட்டும் விரட்டியிருந்தார். ஆனால் இன்று அதே தினகரன்தான் இந்த வீட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவரது குடும்பத்தினர், சசிகலா குடும்பத்தினர்தான் இந்த வீட்டுக்குள் புழங்கிக் கொண்டுள்ளனர்.

வந்து குவிந்த குடும்பங்கள்
ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்ட, விரட்டப்பட்ட, நீக்கப்பட்ட அத்தனை பேரும் ஜெயலலிதா இறந்த அடுத்த நிமிடமே வந்து குவிந்து விட்டனர். கட்சியையும், ஆட்சியையும் தங்கள் வசம் வைத்து ஆட்டிப்படைத்து வருகின்றனர். இந்த நிலையில் தீபா தனது அத்தையின் வீட்டுக்குள் காலடி எடுத்துக் கூட வைக்க முடியாத நிலை நிலவுகிறது.

தீபாவுக்கு ஒரு நியாயம் - தினகரனுக்கு ஒன்றா
தீபாவுக்கு ஒரு நியாயம் என்றால் அதே நியாயம் தினகரன் குடும்பத்திற்கும், சசிகலா குடும்பத்திற்கும் இருக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள். தீபாவை புறக்கணித்தார் ஜெயலலிதா என்றால் தினகரனையும்தான் நீக்கினார். ஆனால் தினகரன் ஜெயலலிதா வீட்டுக்குள் போய் வரலாம், ரத்த சம்பந்தமான தீபா ஏன் வரக் கூடாது என்றும் இவர்கள் கேட்கிறார்கள்.

சட்டப்படி வாரிசு
எப்படி பார்க்க போனாலும் சட்டப்படி ஜெயலலிதாவின் வாரிசு தீபக்கும், தீபாவும் தான். இவர்களை ஜெயலலிதா இருந்தபோது தன் வீட்டிற்குள் சேர்க்கவில்லை என்றாலும் சட்டபடி அவரது சொத்துகள் அனைத்தும் அவர்களுக்குத் தான் சொந்தம். எனினும் தீபாவும், தீபக்கும் சட்டபடி அணுக வேண்டும். இதன் மூலம் சசிகலா குடும்பத்தினரின் கொட்டம் அடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications