சசி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தொடரும் எதிர்ப்பு- ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு வரவேற்பு
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தொகுதிகளில் மக்களிடைய எதிர்ப்பு நீடித்து வருகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்எல்ஏக்களுக்கு தொகுதிகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்களிடையே எதிர்ப்பு நீடித்து வருகிறது.
தி.நகர் எம்எல்ஏ பி. சத்தியநாராயணன் வாக்கிங் சென்றபோது அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில் சசிகலாவிற்கு எதிராகவும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இணைந்த எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சசிகலாவை சட்டசபைக்குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
இதனையடுத்து 7ஆம் தேதியன்று ஜெயலலிதா நினைவிடம் வந்த ஓபிஎஸ், தன்னை சசிகலா குடும்பத்தினர் அவமானப்படுத்தியதாக கூறினார். கட்டாயப்படுத்தி ராஜினாமா பெற்றதாகவும் கூறினார்.
அம்மாவின் ஆன்மா உடன் தான் பேசியதாக கூறிய அவர், தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெறப்போவதாவும் அப்போது கூறினார். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெறுகியது. அவருக்கு 10 எம்எல்ஏக்களும்,11 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே அவரது ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்தனர். இதனையடுத்து ஆளுநரிடம் ஆதரவு கடிதம் அளித்து முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி. நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சசிகலா ஆதரவு நிலை எடுத்த எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. பல எம்எல்ஏக்கள் ஹாஸ்டலிலேயே முடங்கியுள்ளனர். பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கிங் போன எம்எல்ஏ வளைப்பு
தி.நகர் எம்எல்ஏ சத்தியநாராயணன் இன்று பூங்காவிற்கு வாக்கிங் சென்ற போது பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்தனர். அவரது முடிவுக்குக் காரணம் என்ன என்று கேள்விகளைக் கேட்டு திணறடித்தனர். கூட்டம் சேர்ந்ததாலும், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் சத்தியநாராயணன் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அது வேறு, இது வேறு
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விவகாரமும், சசிகலாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதும் தனித்தனி விவகாரங்கள். மக்கள் அதனை பிரித்துப் பார்க்க வேண்டும். எதற்காக சசிகலாவை ஆதரித்தீர்கள் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். இது அம்மாவின் ஆட்சி. இந்த ஆட்சி கலைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கிறார் சத்தியநாராயணன்.
வீடுகளில் கறுப்புக்கொடி
பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமுவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். அவரது அலுவலகத்தையும் முற்றுகையிட்டதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதே போல கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
அமைச்சர்கள் வீடுகள்
கோவை மாவட்டத்தில் சசிகலா தரப்புக்கு எதிர்ப்பலை அதிகமாக இருப்பதால் அங்குள்ள எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுகுணாபுரத்தில் உள்ள அமைச்சர் வேலுமணி வீடு, திப்பம்பட்டியில் உள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் கொதிப்பு
கடலூர் தொகுதியில் எம்.சி சம்பத்திற்கு தொகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவர் சசிகலா தரப்பிடம் விலைபோனதால் அகால மரணமடைந்துவிட்டார் என்று கடலூர் மாவட்ட இளைஞர்கள் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் செய்தியை பரப்பி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகத்திற்கு எதிராக மக்கள் திரண்டு அவர் இல்லத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்கள்
அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாக மாறிய எம்எல்ஏக்கள் நடராஜ், ஆறுகுட்டி, மாணிக்கம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது. தொகுதிக்கு செல்லும் எம்எல்ஏக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.