அதிமுக அலுவலகத்தை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கைப்பற்றலாம் என பீதி!
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கைப்பற்றலாம் என்ற பீதியில் சசிகலா ஆதரவாளர்கள் உள்ளனராம்.
சென்னை: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக மாறிப் போயுள்ளது சசிகலா குரூப்பின் நிலைமை. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கைப்பற்றலாம் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனராம்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது சசிகலாவுக்கு எதிரான தலைவராக உருமாறியிருக்கிறார். அவருக்குப் பின்னால் பலரும் குவிந்து வருகின்றனர். சசிகலா குரூப் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஓ.பன்னீர் செல்வத்தின் வளர்ச்சியை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை கைப்பற்றலாம் என்ற அச்சம் சசிகலா குரூப்புக்கு வந்துள்ளது. இதையடுத்து அங்கு கட்சி நிர்வாகிகளை விடிய விடிய தங்க உத்தரவிட்டுள்ளனராம். கட்சி நிர்வாகிகளுடன், தொண்டர்கள் பலரும் கூட தங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இரவோடு இரவாக கட்சி அலுவலகத்தை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கைப்பற்றி விட்டால் பெரும் மானக்கேடாக போய் விடும் என்ற அச்சத்தால் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.