பொங்கலுக்கு முன் முதல்வர் பதவி ஏற்கிறார் சசிகலா?
சென்னை: பொங்கலுக்கு முன்பாகவே முதல்வர் பதவியை ஏற்பார் சசிகலா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார். அவருக்கு மோடி அரசின் ஆதரவும் உள்ள நிலையில், அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

அனைத்து மாவட்ட செயலாளர்களும் சசிகலா முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை போயஸ் கார்டனில் சசிகலாவைச் சந்தித்துக் கொடுத்துள்ளனர். ஏற்கெனவே அனைத்து அமைச்சர்களும் சசிகலா முதல்வராக வேண்டும் என்று கூறி வருகின்றனர். குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ அவர்கள் சசிகலா போட்டியிட்டு எம்எல்ஏவாக வசதியாக தங்கள் தொகுதியையே விட்டுத் தருவதாகவும் கூறி வருகின்றனர்.
நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை சசிகலா முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார். இதைத் தொடர்ந்து நேற்று கார்டனில் சசிகலாவைச் சந்தித்த முதல்வர் பன்னீர் செல்வம், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சசிகலா முதல்வராக பதவி ஏற்பது குறித்து மூத்த தலைவர்களும் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புத் தேதி அறிவிப்பதற்குள் சசிகலா முதல்வராக பதவி ஏற்பார் என்றும், அவர் ஆண்டிப்பட்டி அல்லது நன்னிலம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications