ஆளுநரை சந்திக்கும் முன் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய சசிகலா
ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கப் போகும் முன் மெரீனா சென்று அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
சென்னை: கட்சியை கைப்பற்றிய கையோடு ஆட்சியில் அமரத் துடிக்கும் சசிகலா ஆளுநரை சந்தித்து அதற்கான உரிமை கோரப்போகிறார். இதற்காக சசிகலாவிற்கு இரவு ஏழரை மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், 7ஆம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து 40 நிமிடங்கள் தியான புரட்சி நடத்தினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலா மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம். அவருக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அம்மாவின் ஆன்மா எம்எல்ஏக்களை உசுப்பும் என்று கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
#WATCH: #Sasikala pays tribute at Jayalalithaa's memorial at Chennai's Marina Beach, brings with her letter of support claiming majority pic.twitter.com/Lndz82OJCN
— ANI (@ANI_news) February 9, 2017
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் 5 மணிக்கு ராஜ்பவன் போய் ஆளுநரை சந்தித்து விட்டு திரும்பியுள்ளார். நல்லதே நடக்கும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மமே மறுபடியும் வெல்லும் என்று நம்பிக்கையோடு பேசியுள்ளார்.
இந்த நிலையில் சசிகலாவும் ஏழரை மணிக்கு ஆளுநரை சந்திக்கப் போகிறார். 10 அமைச்சர்களுடன் போயஸ் கார்டனை விட்டு கிளம்பிய சசிகலா, ஆளுநரை சந்திக்கும் முன்பு மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தனக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்களின் பட்டியலை வைத்து வணங்கிய சசிகலா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடங்களிலும் மலர் வளையம் வைத்து வணங்கினார்.
எம்எல்ஏக்கள் பட்டியலுடன் ஆளுநர் மாளிகைக்கு கிளம்பினார் சசிகலா. சசிகலா வருகையை முன்னிட்டு ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.