ஜெயலலிதாவின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் தியாகத் தலைவி சின்னமாதானாம்.. ஜெயா ப்ளஸ் அலப்பறை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் சசிகலாதான் என ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி புகழ் பாடிவருகிறது.
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் சசிகலாதான் என ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி புகழ் பாடிவருகிறது. பளபளக்கும் பட்டுப்புடவைக்கு பின்னால் இருக்கும் பட்டு புழுக்களை போல் ஜெவுக்கு பின்னால் இருந்தவர் சசிகலா என்றும் சிறப்பு செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சுமார் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் மரணமடைந்தார்.
அவரது முதலாமாண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

துக்க நாள் அனுசரிப்பு
அதிமுக சார்பில் இன்று துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நினைவிடத்தில் அஞ்சலி
முதல்வர் , துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாசாலையில் இருந்து மெரினா வரை அமைதி பேரணி நடத்தினர். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெ. சிறப்பு நிகழ்ச்சிகள்
தமிழகத்தின் பேராளுமைகளில் ஒருவராக திகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் அவர் கடந்து வந்த பாதை குறித்தும் அனைத்து தொலைக்காட்சிகளும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றர். ஜெயலலிதா குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலா
இந்நிலையில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியும் ஜெயலலிதாவின் சரித்திரத்தை விளக்கும் செய்தி தொகுப்பை வெளியிட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலா குறித்தும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி சிறப்பு செய்தி தொகுப்பை வெளியிட்டது.

பட்டுப்புழுவை போல்..
அதில் ஜெயலலிதாவின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருந்தவர் சசிகலா தான் என அவரது புகழை பாடியது. பளபளக்கும் பட்டுப்புடவைக்கு பின்னால் இருக்கும பல்லாயிரம் பட்டு புழுக்களைப் போல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் சசிகலாதான் என்றது அந்த செய்தி தொகுப்பு.

மெழுகுவர்த்தியாகவும் திரியாகவும்..
மேலும் வெளிச்சத்துக்குப் பின்னால் இருக்கும் மெழுகுவர்த்தியின் கண்ணீரை போல் ஜெயலலிதாவின் வெளிச்சத்துக்குப் பின்னால் மெழுகுவர்த்தியாகவும் திரியாகவும் இருந்தவர் சசிகலாதான் என்றும் அந்த செய்தி தொகுப்பு தெரிவித்தது.

சசிகலாவின் லட்சியம்
ஜெயலலிதாவுக்காக தனது 33 வருட வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா என்றும் அவரது வார்த்தைக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் கட்டுப்பட்டவர்கள் என்றும் அந்த செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டது. கழகத்தை கட்டிக்காக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம் என்றும் கூறப்பட்டது.

சகாப்தத்தை மறக்காது..
கஷ்டகாலத்திலும் ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் சசிகலாதான் என்றும், காலம் சந்தரப்பவாதிகளை மறக்கும் சகாப்தத்தை மறக்காது என்றும் தெரிவித்தது. மேலும் ஜெயலலிதாவுடன் சசிகலா சென்றுவந்த காட்சிகள், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் ஆனது, கூவத்தூர் கூத்துகள், ஜெயலலிதா நினைவிடத்தில் அடித்து சபதம் செய்தது ஆகிய அனைத்து காட்சிகள் அந்த செய்தி தொகுப்பில் வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications