”என் தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல” - சவுதியில் கைகள் வெட்டப்பட்ட பெண்ணின் மகன் மறுப்பு!
வேலூர்: சவுதியில் வீட்டு வேலைக்குச் சென்று கைகள் வெட்டப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணின் மகன், எனது தாயார் மனநிலை சரியில்லாதவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த முனிரத்தினத்தின் மனைவி கஸ்தூரி. அவர் வீட்டு சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் உள்ள ரியாத் நகரில் வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வேலை செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார். இந்த நிலையில் அவரை வீட்டு உரிமையாளர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் கை துண்டான நிலையில், ரியாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டுக்காரரின் சித்ரவதை தாங்காமல், தப்பிஓட முயன்றுள்ளார். அப்போது கஸ்தூரியின் கையை வீட்டுக்காரர் வெட்டி விட்டதாக கஸ்தூரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஆனால் கஸ்தூரி மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டில் இருந்து தப்பிஓட முயற்சிக்கும்போது தவறி விழுந்ததால்தான் கை துண்டாகி விட்டது என அவர் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளரும், சவுதி போலீசாரும் தெரிவித்திருந்தனர். ஆனால் சவுதி போலீசார் கூறிய கருத்துக்கு கஸ்தூரியின் மகன் மோகன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் , "எனது தாயார் கை துண்டிக்கப்பட்டது குறித்து சவுதி அரேபியா போலீசார் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. வேலைக்கு செல்லும் முன்பு அவர் நலமாகத்தான் இருந்தார்.
அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நலமாக இருந்ததாக டாக்டர்கள் சான்றிதழ் அளித்தனர். ஆனால் சவுதி அரேபியா போலீசார் கூறுவதுபோல் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், எப்படி எனது தாயாருக்கு சவுதி அரேபியா செல்ல அவர்கள் விசா கொடுத்திருப்பார்கள். மேலும் கை துண்டிக்கப்பட்டுள்ளதை கீழே விழுந்ததால்தான் துண்டிக்கப்பட்டது என்று எந்த நிபுணராவது ஒத்துக்கொள்வார்களா?
எனவே சவுதி போலீசார் கூறுவது முற்றிலும் தவறானது. இந்த சம்பவம் தொடர்பாக எனது தாயாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பிய திருவண்ணாமலையை சேர்ந்த தரகரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications