கொள்ளை கும்பலிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்: சசி கூடாரத்திலிருந்து தப்பிய அருண்குமார்
கொள்ளை கும்பலிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என சசிகலா தரப்பு கூடாரத்தில் இருந்து தப்பியோடி அருண்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சென்னை: கொள்ளை கும்பலிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என சசிகலா தரப்பு கூடாரத்தில் இருந்து தப்பியோடி அருண்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அதிமுக ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலாவின் பதவி ஆசையால் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. இதில் பலர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்தனர்.
இதையடுத்த எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை காட்டி ஆட்சியமைக்க முயன்ற சசிகலா தரப்பு அவர்களை 10 நாட்களுக்கும் மேலாக கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்திருந்தது. இதையடுத்து சசிகலா தரப்பை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பெற்றது.
சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள்
அடுத்த இரண்டு நாட்களிலேயே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்தது சசிகலா தரப்பு. இதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நாள் வரை எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டிலேயே சிறை வைத்திருந்தது.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை
எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவி விடாமல் பாதுகாக்க மன்னார்குடியில் இருந்து குண்டர்களையும் இறக்கியது. அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களில் ஒருவரான கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பொய்க்கூறி நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து இரவோடு இரவாக சொந்த ஊர் திரும்பினார்.
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம்
அங்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு தெரிவித்தனர். கட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிய அவர். இதுவரை யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்துவந்தார்.
ஓபிஎஸ்க்கு ஆதரவு
இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்ததார். அப்போது தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.
கொள்ளை கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டும்
அதிமுக கட்சி ஒரே குடும்பத்தின் கையில் உள்ளதாக கூறிய அவர், இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். மேலும் அதிமுகவை கைப்பற்றியுள்ள கொள்ளை கும்பலிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.