டிஎன்பிஎஸ்-பிக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு!
டிஎன்பிஎஸ்சிக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதி ராமமூர்த்தியை மீண்டும் நியமிக்க கூடாது என்பதும் சுப்ரீம்கோர்ட் உத்தரவு.
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) 11 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சிக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரே நேரத்தில் 11 பேரை உறுப்பினர்களை நியமித்தது தமிழக அரசு. இதில் பணிநீட்டிப்பு வழங்க உயர்நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தியும் ஒருவர்.

இந்த 11 பேர் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக, புதிய தமிழகம் கட்சி, சமூக நீதி பேரவை சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 11 உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இதனிடையே 11 பேரின் பதவி காலத்தை 3 மாதம் நீட்டிக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதனையும் நிராகரித்த உச்சநீதிமன்றம், டிஎன்பிஎஸ்சிக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது. அத்துடன் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தியை மீண்டும் உறுப்பினராக நியமிக்கவும் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications