ஆசிரியர் திட்டியதால் தீக்குளித்த மாணவி- உயிருக்கு போராட்டம்
சென்னை: சென்னையில் ஆசிரியர் திட்டியதால் மாணவி தீக்குளித்து உயிருக்கு போராடி வருகிறார்.
திருவொற்றியூர் அப்பர் நகர் கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மகள் பவித்ரா . இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பவித்ராவின் தாயார் ஷோபா செவ்வாய்க்கிழமை பள்ளியில் படிக்கும் தனது மகளை பார்க்கச் சென்றார். அப்போது ஆசிரியை ஒருவர் பவித்ரா சரியாக படிப்பது இல்லை என புகார் கூறினாராம்.இதனால் அவமானம் அடைந்த பவித்ரா செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்ன விசயங்களுக்கு கூட தற்கொலை முடிவை நாடும் இன்றைய குழந்தைகளின் மனப்போக்கு பெற்றோரை அதிர்வடைய செய்துள்ளது.