கரூரில் பயங்கரம் - பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொலை.. காதலிக்க மறுத்ததால் கொடூர தாக்குதல்!
கரூர்: கரூரில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தன்னையும் குத்திக் கொண்ட இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள ரெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகள் பாரதிபிரியா (14) அதே பகுதியில் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.

இதே ஊரை சேர்ந்த நடராஜ் மகன் மனோஜ் (23) கட்டிட வேலை பார்த்து வருகிறார். பாரதிபிரியாவை மனோஜ் ஒருதலைபட்சமாக காதலித்ததாக தெரிகிறது. ஆனால் இந்தக் காதலை பாரதிபிரியா ஏற்கவில்லை.
இது தொடர்பாக ஈஸ்வரன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சின்னதாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் மனோஜை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்ற பாரதிபிரியாவை வழிமறித்து கத்தியால் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார் மனோஜ். இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சில் பாரதிபிரியாவை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாணவி பாரதிபிரியா உயிரிழந்தார். இதனிடையே கத்தியால் குத்திய மனோஜ் தானும் வயிற்றில் கத்தியால் குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தொடர்ந்து அவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து சின்னதாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications