பள்ளி மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியர் – தாசில்தார் விசாரணை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவரை ஆசிரியர் பிரம்பால் அடித்த சம்பவத்தில் அப்பள்ளி ஆசிரியர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தி வருகின்றார்.
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. இவருடைய பேத்தி சிந்துஜா. இவருடைய அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்ந்து வருவதால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.
சிந்துஜா தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தன்னை ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்துவிட்டதாக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மாணவி சிந்துஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நடராஜன், குழந்தைகள் உதவி மைய இயக்குனர் பாத்திமாராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை
மாணவி கூறிய தகவல்களை அடுத்து குழந்தைகள் உதவி மைய இயக்குனர் பாத்திமாராஜ் கூறும்போது, "காப்பகத்தில் இருந்து யாரோ 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சென்னைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்து வந்த தகவலை தொடர்ந்து விடுதிக்கு தொடர்பு கொண்டு காப்பாளரிடம் பேசி உடனே சிந்துஜாவை மருத்துவமனையில் சேர்க்க கூறினேன்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
மாணவி சிந்துஜாவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று தாசில்தார் துரைராஜ் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளியில் உள்ள மற்ற மாணவிகளிடம், ஆசிரியர்களிடம் மற்றும் பள்ளி ஊழியர்களிடம் விசாரணை நடத்துகிறார்.