பள்ளி மைதானத்தில் 12வது வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை.. கோவில்பட்டி அருகே பரபரப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகேயுள்ள அத்தைகொண்டான் தனியார் பள்ளி மைதானத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் பூச்சிகொல்லி மருந்தி கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள அத்தைகொண்டானில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராமானுஜர் பிறந்தநாள் விழாவில் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உடலின் அருகே கிடந்த பூச்சி கொல்லிமருந்து, குளிர்பானபாட்டில், ஆடைகள் மற்றும் செல் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் சடலமாக கிடந்தது எட்டயபுரம் அருகேயுள்ள படர்ந்தபுளி கிராமத்தை காசிலிங்கம் என்பவரது மகன் நிதிஷ்குமார் என்பது தெரியவந்தது.
நிதிஷ்குமார் குமாரகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு தற்போது தான் தேர்வு எழுதி விடுமுறையில் இருந்துள்ளார். நேற்று கோவில்பட்டியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் நிதிஷ்குமார் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தினை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வு முடிவுகள் வெகுவிரைவில் வெளி வரவுள்ளதால் அந்த பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு எதுவும் காரணம் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.