நெல்லையில் விடுதிக்குள் புகுந்து 12-ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை
திருநெல்வேலியில் 12-ம் வகுப்பு படித்து வந்த வெங்கடேஷ் என்வர் மர்மநபர்களால் வெட்டிகொலை செய்யப்பட்டார்
நெல்லை: நெல்லையில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வல்லநாடு அருகே படுகையூரை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் வெங்கடேஷ். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள ஆதி திராவிட மாணவர் நல விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு விடுதிக்குள் சென்ற 4 பேர் கும்பல் வெங்கடேஷை சரமாரியாக வெட்டியது. இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.