காதலிக்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து.. கல்லூரி மாணவருக்கு போலீஸ் வலைவீச்சு !
காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, காதலிக்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் புவனேஸ்வரி(15). ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (18) என்ற கல்லூரி மாணவர், புவனேஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை அந்த மாணவியை நவீன்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் நவீன்குமார் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மாணவியை உடனடியாக மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.