எங்கள் புத்தகங்கள், சீருடைகள் தீயில் கருகுகின்றன.. கோவை ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு
புத்தகங்கள் கருகுவதாக மாணவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: மாணவர்களின் புத்தகங்கள் , சீருடைகளை சமூகவிரோதிகள் சிலர் எரித்து விடுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் உள்ள, தெற்கு துவக்க பள்ளி செயல்படுகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் , இப்பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று வகுப்பறைகளில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயில், மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் பொருட்கள் கருகின. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சூலூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று சீருடைகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு 100 க்கும் மேற்பட்ட சீருடைகள் கருகி நாசமாகின. குறிப்பாக விடுமுறை தினங்களில் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெறுவதாகவும், சமூக விரோதிகளின் கைவிரிசை தான் இந்த தீ விபத்து சம்பவத்திற்கு காரணம் எனவும், இதனால் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்க கோரி அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனால், போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், பள்ளிக்கு காவலாளியை நியமிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். தீ விபத்தின் காரணமாக தங்களது புத்தகங்கள் எறிந்து விட்டதால் படிக்க முடியாத சூழலில் இருப்பதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.